Thursday, October 31, 2013

"அன்ன சிவன்' வழிபாடு வைபவம்






அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

 அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! 
சங்கரனின் பிராண நாயகியே!

மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் 
ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்!

 மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

 எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!
"அன்னம் பிரஜாபிஸ் சாக்ஷாத்
அன்னம் விஷ்ணு சிவ' 

-  நம்மை போஷிக்கும்  அன்னமே மும்மூர்த்திகளின் வடிவமாகும் ..!
"அன்னமானது பிரத்யட்சமான பிரம்ம சொரூபம், விஷ்ணு சொரூபம், 
சிவ சொரூபம் என்று வேதம் சொல்வதால், அது மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

அன்னம் ஸ்வயம் பிராணா'- அன்னமே ஜீவன் என்கிறார்கள் 
வேதம் அறிந்தவர்கள்.
"அன்னம் அளி. ஓயாமல் அன்னம் அளி' என்கிறது  பவிஷ்ய புராணம்.

""அன்னத்தை இகழாதே. அன்னத்தை அலட்சியம் செய்யாதே. 
அன்னத்தைப் பெருக்க முயற்சி செய்' என்கிறது தர்மசாஸ்திரம்.
"பசி என்று வந்தவர்களுக்குத் திருப்தியாக அன்னமிடு. அது, உனக்கும் உன் வாரிசுகளுக்கும் புண்ணியத்தைச் சேர்க்கும்; போதும் போதும் என்று சொல்லும்வரை அன்னமிடுவதால் உன் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும்' என்கின்றன ஞான நூல்கள்.
அதனால்தான் பல ஆலயங்களில் அன்னக்கூடம் அமைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னத்தினை பிரசாதமாக வழங்கி, பசிப்பிணியைப் போக்குகிறார்கள்.

 கங்கை நதி ஓடும் காசியில் பல அன்னச் சத்திரங்களும், மடங்களும் உள்ளன.

தமிழகத்தில் ஐப்பசி பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது போல , காசியில் கங்கைக் கரையிலுள்ள  மீராகாட் என்னும் படித்துறையில் தீபாவளி (அமாவாசை) அன்று காலையில் "அன்ன சிவன்' வழிபாடு நடைபெற்று வருகிறது. 
அகன்ற நடைபாதையில் தரையைத் தூய்மை செய்து கங்கை நீரால் நன்கு கழுவி, மிகப்பெரிய  மாக்கோலமிட்டு, பெரிய வாழை இலைகளை தரையில் விரித்து, சுமார் நான்கு சதுர அடி பரப்பளவிலும் இரண்டடி உயரத்திலும் அன்னத் தினாலேயே லிங்கம் ஸ்தாபித்து. அதில் காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்து, அந்த அன்னலிங்கத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, மலர் மாலை, ருத்ராட்ச மாலை சாற்றி, அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடைகளை சமர்ப்பித்து, பெரிய தட்டுகளில் இனிப்பு களையும் பழங்களையும் படைப்பார்கள்.
ஒரு சிறு நந்தியின் உருவத்தை அன்னத் தினால் உருவாக்கி, பச்சை மிளகாயினால் காது, வால் வைத்து, புளியங்கொட்டையினால் கண்கள் வைத்து அலங்கரித்து அன்னலிங்கத்தின்முன் வைப்பார்கள்.

காலை சுமார் பத்து மணியளவில், அங்கு கூடியுள்ள பக்தர்கள் மற்றும் காசிக்கு வந்திருக்கும் யாத்திரிகர்கள் முன்னிலையில், வேதம் அறிந்த அந்தணர்கள் கணபதி பூஜையில் ஆரம்பித்து அன்ன சிவனுக்குப் பூஜை செய்வார்கள். 

பிறகு, அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

பக்தர்கள் பூஜை செய்தபின் தேங்காய் உடைத்து, அன்னதானத்திற்காக தயார் செய்திருக்கும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயசம், இனிப்பு வகைகள் முதலியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிப்பார்கள். 
மீண்டும் அனைவரும் பூஜை செய்தபின்,  அந்த அன்னலிங்கத் திலிருந்து சிறிதளவு அன்னத்தையும் இனிப்பு மற்றும் காய்கறிப் பதார்த்தங்களையும் இலையில் வைத்து, எதிரில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதிக்கு சமர்ப்பித்து வழிபடுவார்கள். 

அதற்குப்பின் பூஜை செய்த இடத்திற்கு அருகிலேயே பக்தர்கள் வரிசையாக அமர்ந்த தும், இலை போடப் பட்டு அன்ன சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவர்களுக்கு வழங்கி, மற்ற பொருட்களையும் பரிமாறுவார்கள்.

கங்கை நதியில் நீராடிவிட்டு அந்தப் பாதை வழியாக மகான்கள், புனிதர்கள், பக்தர்கள் நடந்து சென்றிருப்பதால், அவர்கள் பாதங்கள் பட்ட புண்ணிய இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதை உயர்வாகவே நினைக்கிறார்கள். 

இதுபோல் அன்னம் உண்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் என்பதால் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். 

அனைவருக்கும் அன்னசிவன் பிரசாதம் கிடைக்கும் என்பது சிறப்பாகும்.

ஒவ்வொரு அன்னத்திலும் சிவலிங்கம் காட்சி தருவதாக ஐதீகம் என்பதால் அன்னத்தை சிறிதளவுகூட வீணாக்காமல் உண்பார்கள். 

இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும். அதற்குப்பின் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவது வழக்கம். 
இந்த வைபவத்தை காசியிலுள்ள மகாலட்சுமி யாத்ரா சர்வீஸ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், காசி விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சி யையும் தரிசித்தபின் அன்னபூரணி ஆலயத்திற்குச்  சென்று, தங்கத்தாலான அன்னபூரணியை தரிசிப்பார்கள்.
 பிறகு லட்டு தேரில் அன்னபூரணி பவனி வருவதைக் கண்டுகளித்து, அந்த லட்டுகளையே பிரசாதமாகவும் பெற்று மகிழ்வர். 

  

விக்கிரகத்தை தரிசித்து, தீபாவளி தினத்தை புனிதம் மிக்க வகையில் கழிக்கிறார்கள்.
மாலை ஆறு மணிக்குமேல் கங்கை நதிக்கு நடைபெறும் ஆரத்தி மிகவும் ஜெகஜோதியாய்த் திகழும். 
அங்கு கங்காதேவியின் தங்க விக்கிரகத்தை பஞ்ச கங்கா படித்துறையில் எழுந்தருளச் செய்து, சப்தரிஷிகள் பூஜையாக ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும

Wednesday, October 30, 2013

காசியில் தீபாவளி






தீபாவளியன்று ஒவ்வொரு இல்லத்தி லும் "கங்கா ஸ்நானம் ஆச்சா?'என்று விசாரித்து கங்கையை அனைத்து இடங்களிலும் பிரவகிக்கவைக்கிறோம்..!

காவிரியானாலும் தாமிரபரணியானாலும் கிணற்று நீரானாலும் குழாய்த் தண்ணீரானாலும் அன்று அது கங்கைதான்!

அன்று வைகறை வேளையில் கங்கை நம் மனத்தில் ஞானப் பெருக்காக ஓடுகிறாள்.

மானசீகமாக  தீபாவளி நேரத்தில் காசியில் கங்கையில் நீராடி, 
காசி விசுவநாதரையும் காசி விசாலாட்சியையும் அன்னபூரணியையும் தரிசனம் செய்கிறோம்.
"அன்னபூர்ணே சதாபூர்ணேசங்கரப்ராண வல்லபே!
ஞானவைராக்ய வித்யர்த்தம் பிட்சாம் தேஹி ச பார்வதி'
என்கிறார் ஆதிசங்கரர்.

"மக்கள் அஞ்ஞானத்தில் மூழ்கி உன்னிடம் உலக சம்பத்துகளையும் சுகங்களையும் வேண்டலாம். ஆனால், ஜகன்மாதாவான அன்னபூரணி! நீ உன் குழந்தைகளுக்கு முக்தியடைய உதவும் பேரறிவையும் வைராக்கியத்தையும் தந்து அருள்பாலிக்க வேண்டும் தாயே' என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணியைத் துதிக்கிறார்.

நீராடும் போது அனைவரும் அந்த சுலோகத்தைச் சொல்லிக் கொள்ளவேண்டும்..!
காசியில் தீபாவளி  தினத்தில் கங்கை நீரில் மெய்யாகவே நீராடி, உடலும் உள்ளமும் குளிர்ந்து, ஈசனையும் பார்வதியையும் தந்தையாகவும் தாயாகவும் தீபாவளி தினத் தன்று தரிசிக்கும் அனுபவம் அருமையானது..!
புனித கங்கை நதி அலங்காரத் தோற்றம் அளிக்கிறது.
பெண்கள் கங்கைப் படித்துறையில் தீபங்கள் ஏற்றி வைத்து, 
தீர்க்க சுமங்கலிகளாக இருக்க கங்கையை வேண்டி 
பூஜை செய்கிறார்கள்.

காசி கங்கை நதியில் யமுனை, சரசுவதி, தூத்பாபா, கீர்னா ஆகிய புண்ணிய நதிகளும் கலந்து ஓடுவதாக ஐதீகம் ..எனவே காசியில் ஓடும் கங்கையைப் "பஞ்சகங்கா' என்று அழைக்கிறார்கள்.
இந்துக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

கங்கையின் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி, விசுவேசுவரரைத் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
.அஸி நதி கங்கை யில் சங்கமமாகும் கட்டம்; தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் கட்டம்;

கங்கையில் மணி கர்ணிகாவில் நீராடி, மணிகர்ணிகாஅஷ்டகத்தைப் பாராயணம் செய்தால், பிறவிக் கடலைக் கடந்து விடலாம் என்கிறார் சங்கரர்.

பண்டாக்கள் அமர்ந்து, தீபாவளி ஸ்நானம் முடித்து வருபவர்களுக்குப் பூஜைகளைச் செய்து வைக்கிறார்கள். 

உயர்ந்து நிற்கும் மூங்கிற் கழிகளின் முடியில் தொங்குகின்ற கூடைகளில் தீபாவளியை ஒட்டி  தீபங்களை ஏற்றி வைத்து 
ஆகாச தீபங்கள் என்று வணங்கப்படுகின்றன

கங்கைக்கரை ஓரம் உண்மையாகவே தீப-ஆவளி 
(தீபங்களின் வரிசை) தரிசனமாகக் கிடைக்கிறது.
[varanasi042-v.jpg]
கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து, காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்வது முறை. நாமே லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்.
தீபாவளியன்று கிடைக்கும் மிக  அபூர்வமான அனுபவம் இது.

காசியில் இருப்பது ஜோதிலிங்கம். மகா விஷ்ணு ஈசனை ஒளிவடிவமான லிங்க ரூபத்தில் வழிபட்ட காசி விசுவநாதர் உருவில் சிவபெருமான் என்றென்றும் இங்கே சாந்நித்யம் கொண்டிருக்கிறார்

அவிமுக்த க்ஷேத்திரமான காசி ஸ்தலத்தில்  காசி விசுவநாதர் அவிமுக்தேசுவரராக விளங்குகிறார். விசுவநாதரை தீபாவளி தினத்தன்று வழிபடுவது விசேஷம். 

காசி விசுவநாதர் ஆலயத்தில் விடியற் காலை மூன்று மணிக்கு உக்ஷத்கால பூஜையும், பன்னிரண்டு மணியை ஒட்டி உச்சி கால பூஜையும், மாலையில் சந்தியா பூஜையை ஒட்டி சப்தரிஷி பூஜையும் நடக்கின்றன. நள்ளிரவில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது.
சப்தரிஷி பூஜை மிக விசேஷமானது.

ஏழு அந்தணர்கள் சுமார் ஒரு மணி நேரம் 
சிவ ஸ்தோத்திரம் சொல்லுகிறார்கள்.

படிப் படியாக சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார்கள். 

முதலில் கங்கை நீர், பிறகு பால், சந்தனம், தேன் ஆகியவற்றினால் அபிஷேகம் நடக்கிறது.  பலவகை மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

வளையங்களாக மலர் மாலை அலங்காரம். நாகாபரணம் சிவலிங்கத்தின் முடியை அலங்கரிக்கிறது.
ஐந்துமுக விளக்குகளைக் காட்டி, முடிவில் கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள்.

ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலை களையும்,
பஞ்சமுக தீபம் ஐம்புலன்களையும் உணர்த்துவதாக,
இந்த பூஜையின் தாத்பரியம் சொல்லப்படுகிறது.

காசி விசுவநாதரின் பூஜைகளிலேயே இதுதான் மிகவும் முக்கியமானது. தீபாவளியன்று விசுவேசுவரருக்குப் பஞ்சமுக அலங்காரம் செய்து, கவசமாகச் சாற்றுகிறார்கள்.
தீபாவளியின்போதும் மகா சிவராத்திரியன்றும் தங்க விசாலாட்சி அம்மனைத் தரிசிக்கலாம்.நாதசுர இசை மங்களகரமாக முழங்குகிறது. அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதுண்டு.

காசியில் தீபாவளியன்று விசேஷமான அலங்காரங்களுடன் எழுந்தருளும் அன்னபூரணி. காசி விசுவநாதர் ஆலயத்துக்கு இணையாக மிகச் சிறப்புடன் விளங்குகிறது ..
சாதாரண நாட்களில் கருவறையில் அன்னபூரணி அம்மனின் தரிசனம் கதவின் துவாரம் வழியாகவே பக்தர்களுக்குக் கிட்டுகிறது.

கருவறைக்கு எதிரே எண்கோண வடிவம் கொண்ட மண்டபம் இருக்கிறது. அங்கே அமர்ந்து பக்தர்கள் பஜனை செய்கிறார்கள். பூஜை நேரத்தில் ஆலயமணி முழங்குகிறது. பசுவின் முகம் கொண்ட இந்த ஆலயமணியின் நாதத் தில் பக்தர்களின் கோஷம் கலந்து ஒலிக்கிறது. கற்பூர ஆரத்தி காட்டி குங்குமப் பிரசாதம் அளிக்கிறார்கள்.


அன்னபூரணி அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளிக்கும் தேவி.

ஆகவே உலகத்தில் மக்கள் எதனால் உயிர் வாழ்கிறார்களோ, 
எந்த சௌக்கியங்களை அடைய ஆசைப்படுகிறார்களோ- அவ்வளவையும் தரும் செல்வியாக அன்னபூரணி விளங்குகிறாள். 
அன்னபூரணியைப் பூஜை செய்து வழிபடும் முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்க அன்னபூரணிக்குப் பூஜைகள் உண்டு.

ஆனால் முழு தரிசனம் கிடைக்காது. திரை போட்டு மறைத்து விடுகிறார்கள்.

அடுத்த நாள் சோடி தீபாவளி. அன்று தரிசனத்துக்காக சந்நிதியைத் திறந்து வைக்கிறார்கள்.

தீபாவளியன்று ஐசுவரியங்களை அளிக்கும் தேவியாக விளங்கும் அன்னபூரணிக்கு குபேர பூஜை நடக்கிறது.

அன்று கங்கா ஸ்நானம் செய்துவிட்டு ஏராளமான மக்கள்- குறிப்பாக சுமங்கலிகள் தரிசனம் செய்கிறார்கள்.

அடுத்த நாள் சகலவிதமான தன, தான்ய, சம்பத்துகளை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை நடைபெறுகிறது.

இப்படி தீபாவளியை ஒட்டி மூன்று நாட்கள் விசேஷமாக தரிசனம் கிடைக்கிறது.

"கிருபாவலம்பநகரீ காசிபுராதீச்வரி
மாதா அன்னபூர்ணேசுவரி பிஷாம்தேஹி!'

என்று "அன்னபூர்ணாஷ்டக'த்தில் ஆதிசங்கரர் அன்னையை வேண்டுகிறார். உலகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய சகல பாக்கியங்களையும் அடைந்து கரை கண்ட அவதார புருஷரான சங்கரர் அன்னையிடம் பிச்சை கேட்கிறார்.

காசியின் எஜமானியாக விளங்கும் தேவியை அன்னம் அளிப்பவளாகவும், முக்தியைத் தருபவளாகவும், சகலசம்பத்துகளையும் அருளுபவளாகவும், வெற்றியை அளித்து வாழ்த்தும் மாதாவாகவும், கருணையின் வடிவமாக விளங்கும் உலகத் தாயாகவும் வைத்து வழிபடுகிறார் சங்கரர்.

உலகத்தாய் தீபாவளியன்று ஒளி வடிவமாகப் பிரகாசிக்கிறாள்.

நவரத்தினங்களும் இழைத்த அணிகலன்கள் தவழ்கின்றன; அருள்பாலிக்கும் கரங்களை அலங்கரிக்கின்றன; தண்ணொளி வீசும் மணிமகுடமாகத் திகழ்கின்றன. பொன்னும் மணியும் நவரத்தினங்களும் பூட்டி, பொன் உருவிலேயே ஜகன்மாதாவை வைத்துப் பூஜிக்கிறார்கள்.
ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள்.

உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.

ஆலகாலத்தையும் அமுதமாய் விழுங்கிய எம்பிரானுக்கு அப்படி ஓர் எளிய தோற்றமா? அத்தனை பசியா? "உலகக் குழந்தைகளைக் காப்பாற்று; அதற்கு ஒரு பாவனையாக எனக்கு உணவு கொடு!' என்று கேட்கிறார் கைலாசபதி.

அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாகத் தரிசனம் தருகிறார்கள்.

அந்தத் தோற்றம், கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது.

காசி விசுவேசுவரர், வெண்ணீறணிந்த பெருமான்- வெள்ளி மலையமர்ந்த ஈசன் வெள்ளி விக்கிரகமாக ஜொலிக்கிறார்.

லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக் கையை ரூபாய் நோட்டு களாக மழைபோலப் பொழிகிறார்கள்.
அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப்படுகிறது. வகை வகையான இனிய பணியாரங்கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன.


எங்கும் பசியாற்றும் உணவு இறைவனின் அருளாகப் பொங்கி நிறைகிறது. காசியில் அன்ன விசாரமே இல்லை! அதுவும் தீபாவளித் திருநாளில் துளியும் இல்லை!