Thursday, April 21, 2011

கோவர்த்தனக் குடை..



குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தார் கண்ணபரமாத்மா! 
இந்திரனது ஆணையால் வருணன் கல் மழை பொழிவிக்கிறான்.
அத்துன்பத்தில் இருந்து ஆயர்களைக் காக்க ஆயர்தம் குலத் தலைவனான கண்ணன் கோவர்த்தன மலையைத் தன் கையால் தூக்கிக் குடையாய்த் தாங்கும் காட்சி அழகாகக் காட்சிப்படுகிறது. 

இனிய நீர்ச்சுனைகளும் இன்னிசை ஓடைகளும் நிறைந்த குன்றம் யாராலும் ஏற முடியாத படி செங்குத்தாக இல்லாமல் ஆடு மாடுகளும் மற்ற விலங்குகளும் மனிதர்களும் எளிதாக ஏறிச் சென்று இயற்கை வளங்களை அனுபவிக்கும் படியாக அமைந்த குன்றம் கோவர்த்தன மலை

இறைவனே கோவர்த்தனக்குன்றின் வடிவில் நின்று ஆய்ப்பாடியினர் படைத்த படையல்களை எல்லாம் ஏற்றுக் கொண்டான் என்றால் இதன் பெருமையைச் சொல்லி முடியுமா?

கோவர்த்தன குன்றத்தின் மீது மரங்களின் காய்களையும் கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும் (பெண்குரங்குகள்) கடுவன்களும் (ஆண்குரங்குகள்) நிறைய உண்டு. 
மற்ற இடங்களில் வாழும் குரங்குகள் ஐந்தறிவினவாக இருக்க இந்த கோவர்த்தன குன்றத்தில் வாழும் குரங்குகளுக்கு மட்டும் ஆறாவது அறிவும் இருக்கின்றது ... 
எனவே இந்த மந்திகள் தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்க வைக்கும் போது தங்கள் முன்னோனாகிய அனுமனின் வீர தீர கதைகளைச் சொல்லித் தூங்க வைக்கின்றன.
 கதைசொல்லிக் குழந்தைகளைத் தூங்கவைப்பதை  எங்கே கற்றன? 

ஆதி சேஷன் தன் ஆயிரம் தலைகளால் இவ்வுலகைத் தாங்குவதைப் போல் தன் விரல்களால் இக்குன்றம் ஏந்திக் குளிர்மழையிலிருந்து ஆய்ப்பாடி ஆயர்களையும் அவர் தம் செல்வங்களையும் காத்தானே கோகுலன். ..!

அவர்கள் இம்மழையின் கீழ் பல நாட்கள் தங்கியிருந்த போது அவர்களிடம் இருந்து அனுமன் கதைகளையும் அவற்றைச் சொல்லி தம் குழந்தைகளை உறங்க வைக்கும் முறையையும் இந்த மந்திகள் கற்றுக் கொண்டன போலும்.

கோவர்த்தன மலை நிழலில்  சிறு குழந்தையை ஏந்தியபடி செல்லும் ஆயன், தாடியுடன் கையில் கோல் கொண்டு செல்லும் முதியோன், இடைச்சி, ஓலைப் பாயைச் சுருட்டித் தலையில் வைத்துக் கொண்டு உரியில் வரிசையாய் அடுக்கிய தயிர்க் குடங்களுடன் செல்லும் பெண், கன்றை நாவால் தடவும் பசு, பாற்குடம் ஏந்திப் பால் கறக்கும் ஆயன், துள்ளி விளையாடும் கன்று, ஆநிரைகள் என ஓர் ஆயர் பாடியை அப்படியே கண் முன் நின்று காக்கிறார் ஐந்து வயதும் நிரம்பாத சிறுபாலகனாய் காட்சியளித்த கண்ணன்

கோவர்த்தன கிரி கண்ணன் மீது அதிக அன்பு கொண்டு,இந்த குழந்தை தன்னைத் தூக்கிச் சுமக்கிறதே இந்தக் குழந்தையை நாம் சுமக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டதாம்.

ஏழு நாட்கள் மலையைச் சுமப்பதற்கான வலிமையை இந்த மலையே கண்ணனுக்குக் கொடுக்கிறதோ என்று வியந்த கோகுலவாசிகளுக்கும், மாடுகன்றுகளுக்கும் ஏழுநாள் பசி இல்லை தாகம் எடுக்கவில்லை,.கண்ணன் அருள்.

கலியுகத்தில் திருவேங்கடமுடையானாக அவதரித்த கண்ணனை ஏழுமலைகளாக -ஷேசாசலமாகத் தாங்கி ஏழுமலை வாசனாக்கி மலை பெருமை சேர்த்துக் கொண்டது.

ஏழுநாள் குன்றம் ஏந்தியவனை ஏழுமலையாகி வாசம் செய்யவைத்த மலை மக்களால் பிரதட்சிணம் செய்து வணங்கப்படுகிறது.

ஆலிலையில் பள்ளிகொண்ட அற்புத பாலகனாய் கராரவிந்தத்தால் பதாரவிந்ததைப் பற்றி ,முகாரவிந்தத்தில் விகசிக்கும் புன்னகையோடு அற்புத மாயா தரிசனத்தை என்றும் பதினாறான மார்க்கண்டேய முனிவருக்கு அருளி குருவாயூர் ஷேத்திரத்தில் எழில் கோலம் கொண்டருளும் குருவாயூரப்பனை மச்ச அவதாரம் முதலாகக் கொண்டு நூறு தசகங்களால் நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரி விசுவரூபியாக வராக அவதாரத்தில் பூமியையே எளிதாக தூசிபோல் மீட்டெடுத்த கிருஷணனுக்கு, ஒரு குன்றைச் சுமப்பது எம்மாத்திரம்? என்று வணங்குவார்

தீபாவளி முடிந்த மறு நாள் "கோவர்த்தன பூஜை" மிகவும் உற்சாகமாக பீஹார், உத்தர்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாகாணங்களில் நடக்கும். 

விழாவன்று எல்லோரும் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டத்திலும் பஜன்களிலும் பங்கு ஏற்று தங்களையே மறப்பார்கள். 

கோ என்றால் பசு, வர்தனா என்றால் ஊட்டம் தருவது ... 

ஆடுமாடுகளுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் புற்கள் நிறைந்த நிலங்கள் சூழ்ந்த இடம் தான் கோவர்த்தன மலை....
கிருஷணர் பால பருவத்தில் ஓடி விளையாடிய இடம்  இந்த விரஜபூமி. 
இந்த இடத்தில் தான் கோவர்தன மலை வந்து அமர்ந்தது.
கண்ண்ன் பிறந்தான், வளர்ந்தான், விரஜபூமிக்கு வந்து இராஸலீலையில் ஈடுபட்டான். 

ஒவ்வொரு வருடமும் அங்கு இந்திரபூஜை நடக்கும், 
ஆனால் இந்த மாயக்கண்ணன் அதை மாற்றினான். 

கோமாதாவுக்கும் கால்நடைகளுக்கும் உணவைக் கொடுக்கும் 
கிரிராஜனை வணங்க வைத்தான். 

கண்ணன் சொல்லே மந்திரமாக ஏற்றுக்கொண்டு அவன் வார்த்தையில் கட்டுண்ட விரஜவாசிகள் இந்திரனை மறந்து அந்த மலையைப் பூஜிக்கத் தொடங்கினார்கள். அவ்வளவுதான் இந்திரனுக்கு வந்தது கோபம். 

திடீரென்று இடி இடித்து கனமழையை உண்டாக்கினான். 

பசுக்கள், விரஜவாசிகள், கோபியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
புன்னகையுடன் வந்தான் மாதவன். 
தன் சுண்டுவிரலால் அந்த மலையைத் தூக்கி அதனடியில் தன் மக்களுக்குப் புகலிடம் கொடுத்துக் காத்தார். 

இந்திரனும் பின்னால் கண்ணனிடம் மன்னிப்புக் கோரினான்.

ஒரு சின்ன மலையைச் சாணத்தினால் உண்டாக்கி அதற்கு மலர்மாலைச் சார்த்தி, பின் அழகான ரங்கோலி என்ற வண்ணக்கோலம் இட்டு அதை கோவர்த்தனகிரியாக வழிபடுவார்கள் அந்த ஊர் மக்கள். 

பின் கண்ணனுக்குப் பிடித்த பலவகை இனிப்புக்கள், முக்கியமாக பால், தயிர் சேர்த்த பலகாரங்கள், அன்னம், பருப்பு என்று 56 வகைகள் நைவேத்தியம் செய்ய எடுத்துவந்து அதையும் மலை போல் குவிப்பார்கள். இதை "அன்னகூட்" என்கிறார்கள்.

சில மக்கள் சாதம் வடித்து அதையே மலை போல் ஆக்கி நைவேத்தியம் செய்கிறார்கள். அண்ணாமலை கிரிவலம் வருவது போல் இந்த மலையையும் கிரிவலம் வருகிறார்கள். 

பகீரதன் பூமிக்குக் கொண்டு வந்த கங்கையைப்போல் இங்கும் ஒரு கங்கை இருக்கிறது. இதன் பெயர் "மானஸ கங்கை".

 கண்ணன் தன் மனதினால் உற்பத்தி செய்த கங்கை இது. 

அதனால் "மானஸ கங்கை" என்று பெயர் வந்தது. இந்த மலை ஆரம்பத்தில் 30 கிமீ உயரம் இருந்ததாம். 

இப்போது 80 அடி உயரம்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள். 

இந்த மலையில் அங்கப்பிரதக்ஷிணமும் செய்கிறார்கள்.
இந்த கோவர்த்தனபூஜை செய்ய பாபங்கள் நீங்கி வாழ்க்கை வளமுறும்.

மழை வந்ததும், முதலில் பசுக்கள், தலைகளைத் தாழ்த்திக் கொண்டு, கன்றுகளைத் தன் கால்களின் இடையே வைத்துக் கொண்டு கண்ணனிடம் வந்து நின்றதாம்! 

அதன் பிறகே மனிதர்கள் வந்து நின்றனராம்!

கண்ணன் தன் ஒரு கைச் சுண்டு விரலால் கோவர்த்தன மலையைக் குடையாக்க, அனைவரும் அதன் கீழ் ஒரு வாரம் நிம்மதியாக இருந்தனர்.
இந்த அற்புதத்தைக் கண்டு இந்திரன் திகைத்தான். 
கண்ணன் யார் என்று புரிந்தது. மேகங்களை விலக்கி, கண்ணனைச் சரணடைந்து, 'கோவிந்தன்' என்று பெயர் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தான்..























[India+Trip+2007+-+Mahabalipuram+008.jpg]

போகி என்றால் இந்திரன். பொங்கலுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகை கொண்டாடி பழையன கழித்து புது வாழ்வு ஏற்கிறோம்











  •  
sri-guruvayurappan

9 comments:

  1. dear thozi,
    You have given a good presentation
    about govarthanan.Thanks a lot

    ReplyDelete
  2. கோவர்தன கிரியைக்குடையாகத்தாங்கிப் பிடித்து மக்களைக் காத்த ஸ்ரீ கிருஷ்ணனின் மகிமைகளை இந்த கோபாலகிருஷ்ணனுக்கு விளக்கிய படங்களும், பாடங்களும் வழக்கம்போல் மிக அருமையாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  3. குன்றம் ஏந்தி குளிர்மழை காத்த படங்கள் அருமை. விவரங்களும்.

    ReplyDelete
  4. படங்கள் அருமை..உங்கள் விளக்கமும்

    ReplyDelete
  5. ஆன்மீகம் மணம் கமிழும் அற்புதமான பதிவு..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. படங்களும், கதை வடிவமும் அழகு.

    ReplyDelete
  7. எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லைஎன்றாலும் சிற்பங்களையும் ஓவியங்களையும் ரசிப்பது ரொம்ப பிடிக்கும். நீங்கள் வெளியிடும் படங்கள் ரொம்ப அருமை.

    ReplyDelete